ஜெய்ப்பூர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகளான சாராவை, தான் விவாகரத்து செய்துவிட்டதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட், நேற்று டோங்க் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில், தனது மனைவியின் பெயரை குறிப்பிடாமல் ‘விவாகரத்து பெற்றவர்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது சச்சின் பைலட் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவியின் பெயருக்கு முன்னால் சாரா பைலட் என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்போது அவர் தனது மனைவி சாராவின் சொத்து குறித்தும் பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தார். முன்னதாக ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான ஃபரூக் அப்துல்லாவின் மகளும், உமர் அப்துல்லாவின் சகோதரியுமான சாராவுக்கும், சச்சின் பைலட்டுக்கும் கடந்த 2004ல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் பிரிந்து வாழ்ந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் சச்சின் பைலட் துணை முதல்வராக பதவியேற்றபோது, சாரா பைலட் மற்றும் அவரது இரண்டு மகன்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
தற்போது தனது மனைவியுடன் விவாகரத்து பெற்றுவிட்டதாக சச்சின் பைலட் பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சச்சின் பைலட்டின் சொத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் சச்சின் பைலட் தனது சொத்து மதிப்பு ரூ.3.8 கோடி என்றும், இம்முறை தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.7.5 கோடி சொத்து என்றும் தெரிவித்துள்ளார்.