ரபா: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப் பின் முதல் முறையாக காசாவின் ரபா எல்லை திறக்கப்பட்டது. அவ்வழியாக வெளிநாட்டவர்கள், காயம் அடைந்த பாலஸ்தீன மக்கள் வெளியேறி எகிப்தில் நுழைந்தனர். பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் மூண்டது. 4வது வாரத்தை எட்டியுள்ள இப்போரில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் காசாவில் உள்கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம் இரவு நேரங்களில் தெற்கு காசாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை இப்போரில் காசாவில் 8,525 பேர் பலியாகி உள்ளனர். இதில் சுமார் 4,000 பேர் குழந்தைகள்.
தற்போது காசாவில் உணவு, குடிநீர் இல்லாமல் கடுமையான சுகாதார பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், ரபா எல்லை வழியாக வெளிநாட்டவர்களை அனுமதிக்க அண்டை நாடான எகிப்து சம்மதித்தது. அமெரிக்கா ஆதரவுடன் கத்தார் அரசு எகிப்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரபா எல்லை திறப்புக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்படி, போருக்குப் பின் முதல் முறையாக நேற்று காசாவின் ரபா எல்லை திறக்கப்பட்டது. போரில் மிக மோசமாக காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் எகிப்தில் நுழைந்தனர். அவர்கள் எகிப்து எல்லையில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், இவ்வழியாக 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், இரட்டை குடியுரிமை கொண்டவர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. யார், யார் ரபா எல்லை வழியாக வெளியேற்றப்பட உள்ளனர் என்கிற விவரங்களை எகிப்து அரசு முன்கூட்டியே இஸ்ரேலிடம் வழங்கி இருந்ததாக சர்வதேச மீடியாக்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம் எப்போது வரை ரபா எல்லை திறந்திருக்கும், எப்போது வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என்கிற தகவல்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை. தற்போது வரை காசாவில் 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, காசாவில் மீண்டும் இன்டர்நெட் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாக பாலஸ்தீன தொலைதொடர்பு நிறுவனமான பால்டெல் நேற்று தெரிவித்துள்ளது.
* அகதிகள் முகாமில் 2ம் நாளாக தாக்குதல்
இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். 150 பேர் காயமடைந்தனர். அங்குள்ள குடியிருப்புகள் குண்டுவீச்சில் தரை மட்டமான நிலையில், இடிபாடுகளின் உள்ளே பலர் சிக்கி உயிருக்காக போராடுகின்றனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச மனிதநேய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த தாக்குதலில் ஹமாசின் மத்திய ஜபாலியா பட்டாலியன் கமாண்டர் இப்ராகிம் பைரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இவர் கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் படையை வழிநடத்திய முக்கிய தளபதிகளில் ஒருவர். அவர் அகதிகள் முகாமில் பதுங்கியிருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறி உள்ளது. இதனை ஹமாஸ் முற்றிலும் மறுத்துள்ளது. நேற்று இதே அகதிகள் முகாமில் மீண்டும் குண்டுவீசப்பட்டது.
* இந்திய வம்சாவளி வீரர் பலி
காசாவில் நடந்து வரும் தரை வழி தாக்குதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் வீரர் ஹலேல் சாலமன் வீரமரணம் அடைந்ததாக அந்நாட்டின் டிமோனா நகர மேயர் கூறி உள்ளார். தரைவழி தாக்குதலில் சாலமனை சேர்த்து 11 இஸ்ரேல் வீரர்கள் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘கடினமான போரில் மகத்தான வீரர்களின் இழப்பு வேதனை தருகிறது. ஆனாலும் வெற்றி பெரும் வரை இப்போர் தொடரும்’’ என்றார்.