புதுடெல்லி: பணக்காரர்களை மனதில் வைத்து ரயில்வேயின் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன என்றும் மோடியின் உத்தரவாதம் என்பது துரோகத்திற்கான உத்தரவாதம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், இந்திய ரயில்வே அதற்கான கொள்கைகளை தயாரிக்கும் போது பணக்காரர்களை மனதில் வைத்துதான் உருவாக்குகிறது. சாதாரண செருப்பு அணிந்தவர்களை விமானத்தில் பயணிக்க வைப்பதற்கான கனவை காட்டி, ஏழைகளின் வாகனமான ரயில்களில் பயணம் செய்வதில் இருந்து அவர்களை மோடி விலக்கி வைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத கட்டண உயர்வு, ரயில்களில் டைனமிக் கட்டணம் என்ற பெயரில் பலமடங்கு கட்டண கொள்ளை, டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் அதிகரிப்பு ,பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் கட்டணம் உயர்வு என பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆடம்பர ரயில்களின் படத்தை மக்களுக்கு காட்டி அதில் ஏழைகள் அடியெடுத்து வைக்கக்கூட முடியாமல் செய்து விட்டார் மோடி. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.,700 கோடியை வசூலித்துள்ளனர். ரயில்வேயின் முன்னுரிமை பட்டியலில் இருந்து ஏழைகள்,நடுத்தர மக்கள் நீக்கப்பட்டுள்ளனர். பொது பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளின் தயாரிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளன. ஏழைகள்,நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் ரயில்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சுயநலத்திற்கான திட்டங்களை செயல்படுத்தவே தனியாக சமர்ப்பிக்கப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்துள்ளனர்.மோடியின் மீதான நம்பிக்கை துரோகத்திற்கான உத்தரவாதம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.