இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ம் தேதி பொதுதேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 265 இடங்களில் 133 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களிலும், வௌியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சுயேட்சை உறுப்பினர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெறவில்லை.
இழுபறி நீடித்த நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆட்சியமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃபின் பெயர் பாகிஸ்தான் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டது. அவரை எதிர்த்து இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் களமிறக்கப்பட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் 201 பேர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி வேட்பாளர் 92 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இதையடுத்து ஷெபாஸ் ஷெரீஃப் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய ஷெபாஸ், “ காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் விடுதலைக்காக ஒரு தீர்மானத்தை அரசு நிறைவேற்றும்” என்றார். இன்று நடைபெற உள்ள விழாவில் 33வது பிரதமராக ஷெபாஸ் பதவி ஏற்க உள்ளார்.
பாவம் அவரே குழம்பிட்டாரு..
நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஷெபாஸ் ஷெரீஃப் எதிர்க்கட்சி தலைவரான நான் என்று பேச அதை கேட்ட எம்பிக்கள் அதிர்ச்சியடைந்தனர்.