சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): ‘‘அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறருக்கு உதவி புரியுங்கள்; சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள்’’ என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் .
ராமதாஸ் (பாமக நிறுவனர்): உலக மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இப்புனித நாளில் உறுதியேற்போம்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம்.
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்): ரமலான் பண்டிகையில் சமத்துவமும், சகோதரத்துவமும் பரவுகிறது. மேலும், இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பட தமாகா என்றும் துணை நிற்கும்.
டிடிவி தினரகன் (அமமுக பொதுச்செயலாளர்): ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): நபிகள் நாயகம் போதனையை கருத்தில் கொண்டு, அனைவரும் தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்): புனித ரமலான் மாதத்தில் நம்மிடம் காணப்பட்ட ஈகைக் குணம் ஆண்டு முழுவதும் தொடரவும், வெறுப்புணர்வு நெருப்பை அணைக்க அனைவரையும் அரவணைப்போம் என உறுதியேற்போம்.
நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர்): மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவ ஒற்றுமையையும் காத்திடுவோம்.
இதுபோல எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்) இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தா உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.