புதுடெல்லி: மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ரயில்வேயில் மண்டல வாரியாக காலியாக உள்ள லோகோ பைலட் (ஓட்டுநர்) மற்றும் உதவி லோகோ பைலட் (உதவி ஓட்டுநர்) பணியிட எண்ணிக்கையை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு ரயில்வே தரப்பில் தரப்பட்ட பதிலில், ’நாடு முழுவதும் 16 ரயில்வே மண்டலங்கள் வாரியாக தனித்தனியாக காலி பணியிடங்கள் தரவுகள் பராமரிக்கப்படவில்லை.
அனைத்து மண்டலங்களைச் சேர்ந்து மொத்தம் 70,093 ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளன. இதில் 14,429 (20.5 சதவீதம்) பணியிடங்கள் காலியாக உள்ளன. 57,551 உதவி ஓட்டுநர் பணியிடங்களில் 4,337 (7.5 சதவீதம்) பணியிடங்கள் காலியாக உள்ளன’ என கூறப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுநர், உதவி ஓட்டுநர் என 1 லட்சத்து 27 ஆயிரத்து 644 பேர் இருக்க வேண்டிய நிலையில், 18,766 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் கூடுதல் பணி நேரம் ரயிலை ஓட்ட வேண்டியிருப்பதாகவும், கடுமையான மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில்வே யூனியன் மற்றும் டிரைவர்கள் சங்கங்கள் குற்றம்சாட்டி உள்ளன.
ரயில்வே விதிமுறைகளின்படி, ஒரு லோகோ பைலட் 9 மணி நேரம் பணி புரிய வேண்டும். ஆனால் ஆள்பற்றாக்குறை காரணமாக பலரும் 12 மணி நேரத்தை தாண்டி பணியாற்றுவதாக கூறுகின்றனர். இந்திய ரயில்வே லோகோ ரன்னிங்மென் அமைப்பின் செயல் தலைவர் சஞ்சய் பாந்தி கூறுகையில், ‘‘என்னை பொறுத்த வரையில், ஓட்டுநர், உதவி ஓட்டுநர் காலி பணியிடங்கள் 17 முதல் 18 சதவீதம் வரை இருக்கக் கூடும். அதிகமான பணி நேரம், தொடர்ச்சியான இரவுப் பணிகள் மற்றும் போதிய ஓய்வு அளிக்காதது போன்ற காரணங்களால் பல்வேறு அபாயகரமான ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன’’ என்றார்.