சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அங்கு பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருப்பதாக உழவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. உடனடியாக மழைநீர் அகற்றாவிட்டால், பயிர்கள் அழுகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.