சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2001-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்து அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவித்து, வழக்கை தலைமை நீதிபதி ஒப்புதலை பெற்று வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.