சென்னை: மதிமுக நிர்வாக குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நேற்று எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா, செய்தித் தொடர்பாளர் மின்னல் முகமது அலி, மாவட்ட செயலாளர் கழகக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதற்கு, தமிழ்நாட்டு மக்கள் பேராதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கோடிக்கு மேலான கையெழுத்துக்களைப் பெற்று, அவற்றை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கடமையை விரைவுபடுத்த நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது. பொது சிவில் சட்டத்தை செயற்படுத்த ஒன்றிய பாஜ அரசு துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.