இளையான்குடி: அண்ணாமலை நடையா நடந்தும் எதுவும் நடக்கப்போவதில்லை என பாதயாத்திரை குறித்து சீமான் கிண்டலடித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி பவள விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் முதல் நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது: ஜெயலலிதா இறப்புக்கு பிறகு நான்கு ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிந்து உள்ளது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக ஊழல் பட்டியலை வெளியிட்டால் தான் நேர்மையானது, நடுநிலையானது. அதை மறைத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை புனித தன்மையும், நேர்மையானவர்களும் போல காட்ட முயற்சி செய்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணம் செல்லும் அண்ணாமலைக்கு பிரஷர், சுகர் குறையும். நடையா நடந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. இவ்வாறு கூறினார்.