பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே இன்று அதிகாலை சென்டர் மீடியனில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் இருந்து மயிலாப்பூர் நோக்கி இன்று அதிகாலை கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே உள்ள சென்டர்மீடியன் மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரியின் ஒருசில பகுதி நொறுங்கின.
டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை நடுவில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை 3 ராட்சத கிரேன்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கன் டெய்னர் லாரி மீட்கப்பட்டது. சாலை நடுவே திடீரென சென்டர் மீடியன் அமைக்கப்பட்டிருப்பதாலும், அறிவிப்பு பலகை வைக்காததாலும் விபத்து ஏற்பட்டுள்ளது என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் நிலவியது.