Friday, May 24, 2024
Home » பொங்கல் புராண கதைகள்

பொங்கல் புராண கதைகள்

by Karthik Yash

பொங்கல் என்பது இந்தியாவில் நடைபெறும் 4 நாள் கொண்டாட்டமாகும். முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாள் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நான்காவது நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சங்க காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகையின் வரலாற்றை காணலாம். இது ‘திராவிட அறுவடை விழா’ என்று கருதப்படுகிறது. ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த திருவிழா குறைந்தது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர். பழங்காலத்தில் தாய் நீராடல் என்று கொண்டாடப்பட்டது.

பல்லவர்களின் ஆட்சியின்போது, திருமணமாகாத பெண்கள் நாட்டின் விவசாய வளர்ச்சிக்காக நோன்பு இருந்தனர். இந்த நோன்பிற்கு தை நீராடல் அல்லது பாவை நோன்பு என்று பெயர். இது தமிழ் மாதமான மார்கழியில் அனுசரிக்கப்பட்டது. இந்த பண்டிகையின்போது இளம்பெண்கள் நாட்டில் மழை வேண்டியும் மற்றும் விவசாயம் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தனர். மாதம் முழுவதும், அவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்தனர். அவர்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவ மாட்டார்கள். பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். பெண்கள் அதிகாலையில் நீராடினர். ஈர மணலில் செய்யப்பட்ட காத்யாயனி தேவியின் சிலையை வழிபட்டனர். தை மாதம் முதல் நாள் அவர்கள் பாவை நோன்பை முடித்தனர்.

ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் தை நீராடல் விழாவையும், பாவை நோன்பு கடைபிடிக்கும் சடங்குகளையும் தெளிவாக விவரிக்கின்றன. திருவள்ளூர் வீரராகவ கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றின்படி, சோழ மன்னன் குலோத்துங்கன் பொங்கல் விழாவிற்கு சிறப்பாக நிலங்களை கோயிலுக்கு பரிசாக அளித்து வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு 2 வகையான புராண கதைகள் உண்டு. ஒன்று சிவ பெருமானுடன் தொடர்புடையது. மற்றொன்று இந்திரனுடன் தொடர்புடையது.

சிவ பெருமான் ஒருமுறை தனது காளையான பசவாவிடம் பூமிக்கு சென்று மனிதர்களை தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதம் ஒருமுறை சாப்பிடவும் கூறினார். கவனக்குறைவாக இருந்த நந்தி அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும். மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்று மாற்றி கூறிவிட்டார். இந்த தவறால் கோபமடைந்த சிவ பெருமான், பின்னர் பசவாவைச் சபித்தார். அவரை பூமியில் என்றென்றும் வாழுமாறு விரட்டினார். அவர் வயல்களை உழுது மக்களுக்கு அதிக உணவை உற்பத்தி செய்ய உதவ வேண்டும் என்று கூறினார். இவ்வாறு கால்நடைகளுடன் பொங்கல் தொடர்புபடுத்தியுள்ளது.

இந்திரன் மற்றும் கிருஷ்ணரின் மற்றொரு புராணக்கதையும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்தது. பகவான் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில், அனைத்து தெய்வங்களுக்கும் ராஜாவான பிறகு ஆணவம் கொண்ட இந்திரனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார் என்று கூறப்படுகிறது. பசு மேய்ப்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்குவதை நிறுத்துமாறு பகவான் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். இதனால் கோபமடைந்த இந்திரன், தனது மேகங்களை இடியுடன் கூடிய புயல் மற்றும் 3 நாட்கள் தொடர் மழைக்கு அனுப்பினார். கிருஷ்ணர் மனிதர்கள் அனைவரையும் காப்பாற்ற கோவர்தன் மலையை உயர்த்தினார். பின்னர், இந்திரன் தனது தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார்.

* பால் பொங்கல் செய்முறை
பொங்கல் அன்று அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பொங்கல் செய்வது வழக்கம். இவற்றில் பால் பொங்கலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பால் பொங்கல் என்று சொல்லப்படும் வெண் பொங்கலை பாரம்பரிய முறையில் எப்படி செய்யலாம்?

தேவையான பொருட்கள்
பச்சை அரிசி ஒரு கப்
தண்ணீர் 6 கப்
உப்பு தேவையான அளவு
பால் ஒரு கப்

* செய்முறை: ஒரு கப் பச்சை அரிசியை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள். பின் வீட்டில் உள்ள பொங்கல் பானையை எடுத்து அவற்றில் விபூதி இட்டு குங்குமம் வைத்து, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்தினை கட்டி ஆறு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைக்கவும். (அரிசி கழுவிய நீரை பயன்படுத்த வேண்டும்). பின்பு அடுப்பை பற்ற வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்து பொங்கி வரும்போது ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இந்த வெண் பொங்கலை 15 நிமிட நேரம் வேகவைக்க வேண்டும். அதேபோல் அடிபிடிக்காமல் இருப்பதற்காக அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும். 15 நிமிட நேரம் கழித்து பொங்கலை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளலாம். அவ்வளவுதான் பொங்கல் அன்று செய்யக்கூடிய வெண் பொங்கல் தயார். கிராமங்களில் பொங்கல் பானையில் உலை வைக்கும் போது அந்த உலை நீரில் சிறிதளவு அருகம்புல் போடுவது வழக்கம். தங்களுக்கு விருப்பம் இருந்தால் அருகம்புல் சேர்த்துக்கொள்ளுங்கள் இல்லை என்றால் தவிர்த்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

3 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi