Monday, May 27, 2024
Home » பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கொங்கணாபுரம் சந்தையில் 16 ஆயிரம் ஆடுகள் விற்பனை: ₹20 கோடிக்கு வர்த்தகம்

பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கொங்கணாபுரம் சந்தையில் 16 ஆயிரம் ஆடுகள் விற்பனை: ₹20 கோடிக்கு வர்த்தகம்

by MuthuKumar

சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் சனிசந்தை இன்று கூடியது. பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுவதையொட்டி இன்று அதிகாலை 4மணி முதலே சந்தையில் விற்பனை களைகட்டியது. சந்தைக்கு விவசாயிகள் மொத்தம் 16ஆயிரம் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். வழக்கத்தை விட இன்று அதிகமான ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்தது. இதேபோல் 5,800 பந்தய சேவல்கள், 240டன் காய்கறிகள் ஆகியவையும் விற்பனைக்கு குவிந்தது. ஆடுகள், பந்தய சேவல்கள், நாட்டுக்கோழிகள், காய்கறிகளை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், இறைச்சிக்கடைக்காரர்களும் சந்தையில் அதிகாலை முதலே குவிய தொடங்கினர். அவர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

10கிலோ எடையுள்ள ஆடு ₹5,250 முதல் ₹8000வரையும், 20எடையுள்ள ஆடு ₹10,600 முதல் ₹16,000வரையும் 30 கிலோ எடையுள்ள ஆடு ₹16000 முதல் ₹24,000வரையும், வளர்ப்பு குட்டி ஆடு 2,000 முதல் ₹3,500வரையும் விலைபோனது. பொங்கல் பண்டிகையினையொட்டி கிராம பகுதிகளில் சேவல் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக பந்தய சேவல்களை ஒன்றுக்கு ஒன்றை மோதவிட்டு பின்னர் அதற்கான விலையை நிர்ணயம் செய்தனர். பந்தய சேவல் ₹2,500 முதல் ₹8,500வரை விலைபோனது. பந்தய சேவல்களை பெங்களூரு, ஆந்திரா, ஓசூரை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வாங்கி னெ்றனர்.

இதேபோல் மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகளுக்கான அலங்கார பொருட்களும் சந்தையில் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அலங்கார கயிறுகள், சங்கு, சலங்கை, மணி மற்றும் அலங்கார பொருட்கள் ₹10 முதல் ₹750வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ₹22 முதல் ₹30 வரையும், சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ₹30 முதல் ₹60 வரையிலும் விற்கப்பட்டது. சந்தையில் இன்று ₹11கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி
தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையில் மிக முக்கியமானது எட்டையபுரம் ஆட்டுச்சந்தை. சாதாரண வாரங்களில் இரண்டு மூன்று கோடிகள் வரை நடைபெறும் வியாபாரம் பண்டிகை காலங்களில் ஆறு கோடி முதல் எட்டு கோடி வரை நடைபெறும். நாளை மறுதினம் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.

திருச்சி
திருச்சி சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சை, மதுரை, விருதுநகர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், கெங்கவல்லி, நாமக்கல், தம்மம்பட்டி, துறையூர், வேலூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஆடுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சந்தையில் குவிந்தனர். ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இன்று மட்டும் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடலூர்
கடலூர் மாவட்டம், வடலூரில் வாராவாரம் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு வடலூர், குறிஞ்சிப்பாடி, வடக்கு மேலூர், கல்குணம், குள்ளஞ்சாவடி, கருங்குழி, வடக்குத்து, மருவாய், கொளக்குடி, நெய்வேலி, சேப்ளாநத்தம், தம்பி பேட்டை, சத்திரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை இன்று விடியற்காலை 2 மணியிலிருந்து துவங்கப்பட்டது. இங்கு வியாபாரிகள் கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்கி சென்றனர். ஒரு ஆட்டின் குறைந்த விலை 4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi