திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பிரதமர் மோடி இயக்குகிறார் என மாநில காங்கிரஸ் தலைவி ஷர்மிளா கூறினார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான ஷர்மிளா விஜயவாடாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சந்திரபாபுவின் கையில் காங்கிரஸ் ரிமோட் கண்ட்ரோல் என்று முதல்வர் ஜெகன் கூறுகிறார். ஆனால் உண்மையில் ஜெகனுக்கு ரிமோட் கண்ட்ரோல் பற்றி நல்ல புரிதல் உள்ளது.
ஏனென்றால் ஜெகன்மோகனின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியின் கையில் உள்ளது. அவரை ரிமோட் மூலம் இயக்குவது மோடிதான். அதுபோதாதென்று ஜெகனின் வீட்டில் உள்ள ஒருவரும் அவரை ரிமோட் மூலம் இயக்குகிறார். கங்காவரம் துறைமுகத்தை அதானிக்கு மோடி வழங்கினார். மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மோடிக்கு ஜெகன் ஆதரவளித்தார். ஜெகன், மோடியின் வளர்ப்பு மகன் என்றும் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.