மும்பை: மஸ்கட்டிலிருந்து டாக்கா செல்லும் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணை முத்தமிட முயன்ற வங்கதேச வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து மும்பை வழியாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு விஸ்தாரா நிறுவன விமானம் இயக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த முகமது துலால்(30) என்ற வங்கதேச பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்றார். விமானப் பணிப்பெண்ணின் கூக்குரல் கேட்டு பயணிகளும், மற்ற விமான ஊழியர்களும் சேர்ந்து முகமது துலாலை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களிடமும் அவர் ஆபாசமாக நடந்து கொண்டார். இதற்கிடையே, விமானம் மும்பையில் தரையிறங்கியதும் முகமது துலால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.