புதுடெல்லி: ஒன்றிய போலீஸ் படைகள் மற்றும் மாநில போலீஸ் படையினருக்கு தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்காக 12 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அக்னி பரிக்ஷா என்ற பெயரிலான இந்த பயிற்சி அரியானாவின் மனேசரில் அடுத்த மாதம் 24ம் தேதி முதல் நவ.4ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அதிகாரி கூறுகையில்,‘‘தீவிரவாத சம்பவங்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நடக்கலாம்.இந்த தாக்குதலின்போது குறைந்த அளவு உயிர் சேதம் மற்றும் பெரிய அளவில் பொருட் சேதத்தை தவிர்ப்பதே இதன் நோக்கம். இது போன்ற சிக்கலான சமயங்களில் சிறந்த முறையில் செயல்படும் வகையில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, அதனை செயலிழக்க செய்வது, அத்துமீறி பறக்கும் டிரோன்களை சுட்டு வீழ்த்துவது உள்ளிட்டவற்றில் தங்களுடைய அனுபவத்தை என்எஸ்ஜி வீரர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இதில், 15 மாநில போலீசார், ஒன்றிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வர்’’ என்றார்.