பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜ வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மஞ்சு போட்டியிட்டார். இந்நிலையில் பாஜ வேட்பாளரை தோல்வியடைய செய்து பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் மஞ்சு மற்றும் வக்கீல் தேவராஜே கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தேர்தல் நேரத்தில் தவறுகள் நடந்துள்ளதை உறுதி செய்து பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து செப்.1ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக இந்த தீர்ப்புக்கு தடை கோரி பிரஜ்வல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.நடராஜன் விசாரணை நடத்தினார். அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கு மீதான தீர்ப்பு செப்.11 அல்லது 12ம் தேதி வழங்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.