சென்னை, மே 11: 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வேலஞ்சேரியை சேர்ந்த முனுசாமி கிரேன் டிரைவர். அவரது மனைவி தாமரைசெல்வி. இவர்களின் மகள் மோனிஷா(14) அதே ஊரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொது தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது கணித தேர்வு நடைபெற்ற தினத்தில் காலை முனுசாமி தற்கொலை செய்துக் கொண்டு இறந்தார். தந்தையின் இறப்புக்கு இடையில் மோனிஷா பொது தேர்வு எழுதினார். இந்நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், அந்த மாணவி 332 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தந்தை இறந்த சோகத்திலும், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவியை கிராமமக்கள் வெகுவாக பாராட்டினர். இறந்த முனுசாமிக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். அவர்களில் மோனிஷா மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.