ராமேஸ்வரம்: பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்காள விரிகுடாவில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மீனவர்களுக்கு தொலைதூர புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க தடை
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.