மதுரை: வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மதுரை கூடலழகர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரையில் பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஸ்தலம். இங்கு வைகாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, வியூக சுந்தர்ராஜ் பெருமாள் தேவி, பூதேவி தாயாருடன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தரராஜ பெருமாள் தேவி பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நகரில் உள்ள தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக தேர் வலம் வந்தது. சாலையின் இருபுறமும் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.