சென்னை: உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்! என கூறினார். இதன் பின் பேசிய அமைச்சர் அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு மரியாதை செலுத்துவர். மற்ற மாநில அரசுகளும் இதனை பின்பற்றி மனிதாபிமானம் காக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.