சேலம்: தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்கு காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சேலம் அருகே தளவாய்பட்டியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பால் பதப்படுத்தப்படும் பகுதி, பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இடம், உப பொருட்கள் தயாரிக்கும் பகுதி, ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மனோ தங்கராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பால் பவுடர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பாலின் அளவு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆவின் நிர்வாக அதிகாரிகள், உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் பால் உற்பத்தியை பெருக்கவும், ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தித்தர வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறினார். விவசாயிகளுக்கு மிக மிக குறைந்த விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவிதமான அனுமதியுமின்றி சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு பால் வழங்குவது குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், இதுகுறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.