சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த, பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.35 மணிக்கு வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதேபோல் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லூப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது. தொடர்ந்து நள்ளிரவு 1.15 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூரு திரும்பிச் சென்றது.
இதுபோல, பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான பாங்காக், பிராங்க்பர்ட், பாரிஸ் ஆகிய 3 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக, விமானங்கள் வருகை, புறப்பாடு என 8 விமானங்கள், தாமதமாகின. இதன் காரணமாக, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.