சென்னை: பாரிமுனை ராஜாஜி சாலையில் வாடகை செலுத்தாத 48 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். பாரிமுனை ராஜாஜி சாலையில் சென்னை மாநகராட்சி 5வது மண்டலம், 60வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பர்மா பஜார் உள்ளது. இங்கு 796 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் செல்போன், லேப்டாப், எலக்ட்ரானிக் பொருட்கள், பேக் வகைகள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைக்காரர்கள் முறையாக மாதந்தோறும் மாநகராட்சி வருவாய் துறைக்கு வாடகை செலுத்த வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 375 கடைகளுக்கு சரியாக வாடகை செலுத்தாமல் இதுவரை ரூ.75 லட்சம் பாக்கி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை கூறியும் வாடகை செலுத்தாததால், முதற்கட்டமாக மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி, நீதிபதி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வடக்கு கடற்கரை போலீசார் உதவியுடன் அதிக வாடகை பாக்கி வைத்துள்ள 48 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும் வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாடகை செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையாக மீதமுள்ள கடைகள் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.