கோவை: சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரப்பட்டி குட்டையில் அனுமதியின்றி பொக்லைன், லாரிகள் மூலம் நேற்று மண் எடுத்துக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 3 லாரி, 2 பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பர்மிட்டை ஆய்வு செய்தபோது கேரள மாநிலம் திருச்சூருக்கு, வாளையார் பகுதி சொக்கனூரில் இருந்து மண் கொண்டு செல்வதற்காக என அனுமதி இருந்தது. மேலும், லாரி டிரைவர் வைத்திருந்த பேனா மீது சந்தேகம் ஏற்பட்டது.
அதனை வாங்கி சோதனை செய்தபோது அந்த பேனா மூலம் ஒரே பர்மிட்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை எழுதி எளிதாக அழிக்கும் வசதியுடன் அந்த பேனா தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த பேனா மூலம் ஒருமுறை எழுதிய பின் ஊதுபத்தியை பற்ற வைத்து அந்த அனலை எழுத்துக்களின் மீது கொண்டு சென்றால் எழுதப்பட்ட எழுத்துக்கள் தானாக அழிந்து விடுகின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலி பர்மிட் மற்றும் மேஜிக் பேனாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.