சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டம் தொரடிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நடுதொரடிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ராமராஜ் (26). முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள ராமராஜ், ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். இவர் கல்லூரியில் படிக்கும்போது சேலத்தை சேர்ந்த ஒரு பெண்னை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணோடு ஜாதகம் ஒத்துவரவில்லை என கூறி திருமணத்திற்கு ராமராஜின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 20ம்தேதி வீட்டிற்கு வந்த ராமராஜ் சாப்பிட்டு விட்டு வெள்ளிமலை சென்றதாக தெரிகிறது. ஆனால் அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இந்நிலையில் நேற்று ராமராஜ் வெள்ளிமலை அருகே மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த தாய், தந்தை இருவரும் மகனின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும் அவரது பேன்ட் பாக்கெட்டில் ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எனக்கு திருமணம் கைகூடவில்லை, எனவே இறைவனை தேடி செல்கிறேன் என எழுதி உள்ளார்.