மதுரை: மதுரையில் மாணவர்களை குறிவைத்து போதை பயன்பாட்டிற்காக ஆன்லைனில் தூக்க மாத்திரைகளை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ளபாலிடெக்னிக் பாலம் கீழ் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாக புகார்கள் எழுந்தது. மேலும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகள் விற்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்ற இருவரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்தது. மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த வீரமனோகர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் சுமார் 1890 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் இவ்வகை மாத்திரை மருந்து கடைகளில் வழங்கப்படுவதில்லை என்பதால் ‘இந்தியா மார்ட்’ எனும் ஆன்லைன் வர்த்தக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மாத்திரைகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து வாங்கிய மாத்திரைகளை 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.