லாகூர்: பாகிஸ்தானில் நள்ளிரவில் வீட்டில் ‘பிரிட்ஜ்’ வெடித்ததில் ஒரே குடும்பத்தில் 10 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகராக லாகூர் உள்ளது. இங்கு நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இரவில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீயினால் கட்டிடம் முழுவதும் சேதமானது. மேலும் கட்டிடத்தின் ஒருபகுதி உருதெரியாமல் சிதைந்து விழுந்தது.
மீட்பு பணி மேற்கொள்ள தீயணைப்பு வீரர்கள் சிதிலமடைந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது உடல்பாகங்கள் கருகிய நிலையில் ஆங்காங்கே கிடந்தது நெஞ்சை பதற வைத்தது. இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தின் பேரில் தாக்குதல் அரங்கேறியதா? என்ற கோணத்தில் விசாரித்தனர். இதில் வெளியான திடுக்கிடும் தகவல்: நள்ளிரவில் வீட்டில் திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பிரிட்ஜின் கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது.
வீட்டில் வசித்தவர்களால் வெளியேற முடியவில்லை. புகையை சுவாசித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில நிமிடங்களில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உள்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து படுகாயங்களுடன் வெளியேறிய ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளார். வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.