பெதுல்: மபியில் பெதுல் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென இறந்ததால் அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் 542 மக்களவை தொகுதியில் தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பாலவி நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி விட்டது. அங்கு இரண்டாம் கட்டமாக ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. பெதுல் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு இருப்பதால் 543 தொகுதிகளுக்கு பதில் 542 தொகுதிகளில் தான் நடைபெறும்.