மும்பை: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிந்தது. இதன்படி உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடும். காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில், உத்தவ் தாக்கரேயின் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடியாக இணைந்துள்ளன.
இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்தன. இதன்படி, உத்தவ் தலைமையிலான சிவசேனா 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடும். இதை சரத்பவார், உத்தவ் தாக்கரே, மற்றும் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆகியோர் மும்பையில் நிருபர்களிடம் தெரிவித்தனர்.