இத்தாலி: திடீர் கனமழை மற்றும் புயலால் இத்தாலியின் வடக்கு மாகாணமான மோன்சா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. நேற்று மாலையில் இருந்து பெய்யும் மிக பலத்த மழையால் டெசியோ நகர் முழுவதும் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. சூறாவளி காற்றால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெகு தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளன.
கட்டடங்கள் மற்றும் வீடுகளின் மேற்க்கூரைகள் கடும் சேதமடைந்துள்ளன. டெசியோ நகர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இடியுடன் கூடிய மழை தொடரும் என்பதால் மோன்சா, மிலன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரண பகுதிகளுக்கு தயாராக இருக்குமாறு பேரிடர் மேலாண் படையினருக்கு இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. தெற்கு கலாப்ரிக்கா பகுதி மற்றும் சிசிலி தீவை பாதித்த காட்டு தீ மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றுடன் இத்தாலி சமீபத்திய நாட்களில் மாறுபட்ட தீவிர வானிலையுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.