சென்னை: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் மற்றும் வேளாண்அறிவியல் மைய அலுவலர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய மின்னணு வேளாண்மை திட்டம், இ-வாடகை மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் போன்ற விரிவாக்க பணிகளை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். உழுவதற்கும், நடுவதற்கும், களை பறிப்பதற்கும் ஆட்களை நியமித்தால் அதிக செலவாகும். உழவர்க்கு ஒன்றும் மிஞ்சாது. உழுபவர்களை அழுபவர்களாக ஆக்காமலிருக்க இயந்திரமயமாக்கலை பரவலாக்குங்கள்.
பராமரிப்பே இல்லாமல் பயனளிக்கும் பனை மரங்களை மாநிலத்தில் அதிகரிக்கும் வகையில், பனை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். பனை மரங்களில் முக்கியத்துவத்தை உணர்ந்து, பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பனை தொடர்பான ஆராய்ச்சியை வலுப்படுத்தி, பனை சார்ந்த பொருட்களின் மதிப்புக் கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு தரமான பனை சார்ந்த பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
விவசாயிகள் சாகுபடியோடு நின்றுவிடாமல், தரம் பிரித்தல், மதிப்புக்கூட்டுதலிலும் ஈடுபட்டு, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க உதவ வேண்டும். புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் விளைபொருட்களுக்கு மதிப்பு உயர்ந்து கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் புவிசார் குறியீட்டினை விரைவில் பெற துறை அலுவலர்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு கூறினார்.