பில்வாரா: மாதம் ரூ.8 ஆயிரம் சம்பாதிக்கும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.12.23 கோடி செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் எழுதுபொருள் விற்பனை கடையை மாற்றுத்திறனாளி இளைஞர் கிருஷ்ண கோபால் சபர்வால் நடத்தி வருகிறார். இவரது ெபயருக்கு வருமான வரித்துறை (ஐடி) சார்பில் ரூ.12.23 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கிருஷ்ண கோபால் சபர்வால் கூறுகையில், ‘எழுதுபொருட்களை விற்று மாதம் 8 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். ஆனால் எனது பெயரில் ரூ.12 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாய் செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனது பெயரில் இரு நிறுவனங்கள் இருப்பதாகவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரி சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்’ என்றார். மேற்கண்ட விவகாரம் குறித்து வருமான வரித்துறையை தொடர்பு கொண்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.