சேலம்: தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான மக்களின் அன்றாட உணவே கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், சாமை, திணை, குதிரைவாலி, வரகு உள்ளிட்டவைகள். இதனுடன் அவ்வப்போது அரிசி சாதம் சாப்பிட்டு வந்தனர்.கடந்த 1990ம் ஆண்டு வாக்கில் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டது. காலையில் இட்லி, தோசை, மதியம் சாம்பார், ரசம், மோர், பொரியலுடன் அரிசி சாதம், இரவில் இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் உட்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2001ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் மேலை நாட்டு உணவு பழக்க, வழக்கங்கள் அதிகரித்தது. கறிக்கோழி பண்ணைகள் அதிகளவில் வந்தது. அதேபோல் தனியாரால் பொரிக்கப்பட்ட ரெடிமேடு சிக்கன், பாஸ்ட் புட் உணவுகள் மெல்ல, மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. நாடு முழுவதும் பாஸ்ட் புட் கடைகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் பாஸ்ட் புட் கடை, சில்லி சிக்கன் கடைகள் உள்ளன. அந்த அளவுக்கு பாஸ்ட் புட் உணவகம் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சேலத்தை சேர்ந்த உணவியல் மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: இரவு நேர உணவகங்களில் மக்கள் அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளையே உட்கொள்கின்றனர். கலாச்சார மோகத்தால் தொடங்கிய பழக்கத்துக்கு அடிமையாகும் மக்கள் காலப்போக்கில் கையில் பணம் குறைவாக உள்ளபோதும், சாதாரண ரோட்டோர பாஸ்ட் புட் கடைகளுக்கு செல்கின்றனர். நூடூல்ஸ், பிரைடு ரைஸ், மஞ்சூரியன் வகைகள், சில்லிகள் தயாரிக்கும் கடைக்காரர்கள் சுவைக்காக மிளகாய், தக்காளி, சோயா சாஸ்கள், இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகள், டேஸ்ட் மேக்கர் பவுடர், அஜினோமோட்டா ஆகியவற்றை உணவில் சேர்க்கின்றனர். செயற்கை நிறமூட்டிகள் அதிகளவு சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது.
அஜினோமோட்டா சுவைக்காக உணவில் சேர்ப்பதால், ெதாண்டையில் சதை வளர்வது தொடங்கி, அலர்ஜி, குடல் புண், அல்சர், இரைப்பையில் கேன்சர் கட்டிகள் ஏற்படுகிறது. பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஜங்க் புட் உண்ண சுவையாக இருப்பதால் இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். ஜங்க் புட் உணவு அதிகம் உட்கொள்வதால் மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மனஅழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டது. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகிறது.
இதனால் உடற்பருமனில் தொடங்கி எல்லா வகையான வியாதிகளும் வரிசை கட்டி நிற்கிறது. பொதுவாக நம் உணவில் சோடியம் குளோரைடு அதாவது சாதாரண உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த எம்எஸ்ஜி வகை உப்பை உபரியாக பயன்படுத்தும்போது சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக துரித உணவு சாப்பிடுவதால் மூளையின் அளவு 2 மிமீ குறைவதாக கூறப்பட்டுள்ளது. நல்ல ஊட்டச்சத்து நிரம்பிய உணவை சாப்பிடுபவர்களின் மூளை 3.6 மிமீ அளவுக்கு கூடுதலாக வளர்ச்சி பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் மூளை வளர்ச்சியுடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இதன் மூலம் சீக்கிரமே முதுமையும் வந்துவிடுகிறது. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
* இரண்டு முறை வேக வைக்கப்படும் பாஸ்ட் புட் உணவு சாராயத்தைவிட விஷமாகும்.
* அதிகமாக துரித உணவு சாப்பிட்டால் மூளையின் அளவு 2 மிமீ குறைகிறது.
* மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மனஅழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது.