Saturday, July 27, 2024
Home » இதயம் காக்கலாமே?

இதயம் காக்கலாமே?

by Karthik Yash

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் வந்த பிரதமர் மோடி, பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘பாஜவின் இதயத்தில் எப்போதும் தமிழகம் இருக்கிறது. பாஜ அரசு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்து வருகிறது’ என பேசியுள்ளார். பயணத்தின் தொடர்ச்சியாக அவர் தூத்துக்குடிக்கு சென்றார். தமிழகத்தில் பெருவெள்ளத்தால் சென்னைக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் தூத்துக்குடி. நெல்லையும் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவாரணமாக ரூ.37,000 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். ஒன்றிய அரசு தரப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றும், வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை. தமிழகமென்ற இதயம் வெள்ளத்தில் மூழ்கி அளவுக்கு அதிகமாக துடிக்கும்போது, நிவாரண நிதி என்ற உரிய மருத்துவத்தை ஒன்றிய அரசு வழங்க மறுத்தது ஏனோ?

தமிழகத்தில் சுமார் 66 லட்சம் குடும்பங்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன் பெற்று வருகின்றன. இதற்கான ஒன்றிய அரசின் நிதி ஆண்டுதோறும் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தையே சீர் குலைக்கும் வகையில் தற்போது, இத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய நிதியையும் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்திற்கு மட்டும் சுமார் ரூ.2,696 கோடிக்கு மேல் நிலுவைத்தொகை வைத்துள்ளது. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஏழைக் குடும்பங்களின் நிலையை அறிந்தாவது இதயத்தில் சிறிது ஈரம் காட்டியிருக்கலாமே…?

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் ஜவுளித்தொழில் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் ஜவுளிக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் நூல் உள்பட ஜவுளிக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. போதிய லாபமின்றி ஜவுளித்தொழிலை நடத்த முடியாமல் பெரும்பாலான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், பிரதமர் பேசிய திருப்பூர் மாவட்டத்திலேயே ஜவுளித்தொழில் சுமார் 30-40 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் உலகிற்கு பறை சாற்றியது கீழடி அகழாய்வு. இதனையறிந்ததும் அப்போது தொல்லியல் அதிகாரியாக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றிய அரசு அதிரடியாக மாற்றியது. இவரது மேற்பார்வையில் நடந்த முதல் 2 கட்ட அகழாய்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இதுபற்றிய அறிக்கையை ஒன்றிய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கீழடி 2 கட்ட அகழாய்வு அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் விட கடந்த 2015 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸில் வெறும் செங்கல் மட்டுமே இருக்கிறது. இப்படியாக, தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், தேவைகளை உணர்ந்து ஒருபோதும் செயல்படாத பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தேர்தல் நேரத்தில் மட்டும் பயனில்லா பிரசாரங்களை பேசி தமிழக மக்களின் வெந்த மனதில் வேல் பாய்ச்சுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்து வருகிறது.

You may also like

Leave a Comment

fourteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi