சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழக அரசுத்துறைகளில் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் ஒரே துறை வருவாய்த்துறை தான். மக்களுக்கான புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தும்போது, அதனால் வருவாய்த்துறையினரின் பணிச்சுமை அதிகரிக்கிறது.
அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் வழங்கப்பட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இது தொடர்பான பேச்சுகளின் போது ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை அடுத்த இரு வாரங்களில் பிறப்பிக்கப்படவிருக்கிறது. அதன்பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. போராட்டம் தொடர்ந்தால் அரசு நிர்வாகம் செயலிழக்கும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களை அரசு உடனடியாக அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.