சென்னை: தமிழறிஞர்கள் 9 பேருக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 2022ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரங்க.ராமலிங்கம், (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கொ.மா.கோதண்டம், (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யகாந்தன் (எ) மா.மருதாச்சலம் (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கும், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக தெரிவு செய்யப்பட்ட இலக்கிய மாமணி விருதாளர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி அர்ஜூணன் (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தை சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கும், 2023ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சு.சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கும் முதல்வரால் இலக்கிய மாமணி விருதிற்கான ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளியின் மார்பளவு சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.