பெரியபாளையம்: ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டிடம் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆரணி ஜி.என்.செட்டி பகுதியில், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கடந்த 2011 – 12ம் நிதி ஆண்டில் ரூ.2.28 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த கழிவறை கட்டிடம் சரிவர பராமரிக்காத காரணத்தினால், கட்டிடத்தை சுற்றி அடர்ந்த முட்புதர்கள், செடி கொடிகள் வளர்ந்து, விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. எனவே இந்த கழிவறை கட்டிடத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆரணி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.