கான்யூனிஸ்: காசாவில் ஷிபாவைத் தொடர்ந்து மற்றொரு மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து, ஹமாசுடன் கடுமையான சண்டையிட்டு வருகிறது. வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், அடுத்தகட்டமாக அங்குள்ள மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது. மருத்துவமனைகளை ஹமாஸ் படையினர் தங்களின் புகலிடமாக பயன்படுத்துவதாகவும் அங்கு மக்களை மனித கேடயமாக்கி இருப்பதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இதனை ஹமாஸ் மறுத்துள்ளது. ஆனாலும், வடக்கு காசாவில் அனைத்து மருத்துவமனைகளையும் தரைமட்டமாக்க இஸ்ரேல் ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதன்படி முதலில் வடக்கு காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்து சோதனை நடத்தி அங்கிருந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள், தஞ்சமடைந்தவர்களை வெளியேற்றியது. எஞ்சியிருந்த 31 குறைமாத குழந்தைகளை உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் பத்திரமாக வெளியேற்றி எகிப்துக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், அடுத்ததாக இந்தோனேஷியாவின் உதவியில் கட்டப்பட்ட மற்றொரு பெரிய மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துள்ளது. இங்கு 600 நோயாளிகள், 200 சுகாதார பணியாளர்கள், தஞ்சமடைந்த 2000 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையை சுற்றி இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் நேற்று ஹமாஸ் படையினருடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டது. இது குறித்து மருத்துவமனை ஊழியர் மர்வான் அப்துல்லா கூறுகையில், ‘‘சாலையில் இஸ்ரேல் பீரங்கிகள் செல்வது ஜன்னல் வழியாக பார்க்க முடிகிறது.
இந்த மருத்துவமனையையும் இஸ்ரேல் முற்றுகையிட்டு, அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுமோ என நோயாளிகளிலும், குழந்தைகளும் அஞ்சி உள்ளனர். தொடர்ந்து குண்டு சத்தங்கள், துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது’’ என்றார். இந்த மருத்துவமனையை சுற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய இப்போரில் இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது.