வாரணாசி: வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொடர் கனமழையினால் பிற மாநிலங்களுக்கான தக்காளி ஏற்றுமதி வெகுவாக சரிந்தது. வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள லங்கா பகுதியை சேர்ந்த அஜய் பவுஜி தனது காய்கறி கடையில் தக்காளிக்கு ‘’ஜிம்பாய்ஸ்’’ பாதுகாப்பு அளித்திருக்கிறார்.
இது குறித்து கூறிய பவுஜி, ‘’தக்காளி விலை குறித்த மக்களின் விவாதங்களை கேட்டேன். எனது கடையில் காய்கறி அதிலும் குறிப்பாக தக்காளி வாங்க வருபவர்கள் தக்காளிக்கு பேரம் பேசி ஆத்திரமடையாமல் இருக்க கடை முன் அருகே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 பாதுகாப்பாளர்களை நிறுத்தி உள்ளேன். அதே அளவு வாடிக்கையாளர்கள் வருகின்றனர். ஆனால் தற்போது அதிகம் பேரம் பேசுவதில்லை,’’ என்று கூறினார். பவுஜி தக்காளிக்கு ‘’ஜிம்பாய்ஸ்’’ அமர்த்தியிருக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், ‘‘தக்காளிக்கு பாஜக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.