சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இடங்களுக்கு கடந்த 8ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு துவங்கியது. கடந்த 17ம் தேதி வரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.காம் படிப்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள 40 இடங்களில் சேர்வதற்கு 6,200 மாணவர்களும், ராணிமேரிக் கல்லூரியில் உள்ள 60 இடங்களில் சேர்வதற்கு 4,500 மாணவிகளும், பி.காம் சிஏ படிப்பில் சேர்வதற்கு கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களுக்கு 3,400 பேரும், வியாசர்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிகாம் படிக்க 70 இடங்களுக்கு 3478 பேரும், பாரதி பெண்கள் கல்லூரியில் உள்ள 140 இடங்களுக்கு 3,421 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும், பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.