ஜெய்பூர்: ராஜஸ்தானில் கட்சி கூட்டத்தில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இடை யே மோதல் ஏற்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அஜ்மீரில் உள்ள வைசாலி நகரில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சரஸ் பால்வள தலைவர் ராம்சந்திர சவுத்ரி மற்றும் ராஜஸ்தான் போக்குவரத்து கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சவுத்ரி மற்றும் ரத்தோர் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கரன் சிங் கூறுகையில், ‘‘கூட்டத்தில் தலைவர்களுக்கு இருக்கைகளை போடுவதில் ஏற்பட்ட பிரச்னையில் 2 கோஷ்டிகளும் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். மோதலில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை’’ என்றார். ஊழலுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டி சச்சின் பைலட் போராட்டம் நடத்தி வருகிறார். மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கெலாட், பைலட் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.