சென்னை: இலக்கை நிர்ணயித்து கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம் என்று பணி நிறைவு வழியனுப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் மே 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே நீதிபதியாக பணியாற்றிய ஜி.சந்திரசேகரன் 17,000க்கும் அதிகமான வழக்குகளை முடித்து வைத்துள்ளார் என்று பாராட்டினார். நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றிய நீதிபதி ஜி.சந்திரசேகரன், நீதிபதியாக வேண்டுமென்று பலருக்கு ஆசை இருந்தாலும் ஒரு சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியாக மன நிறைவுடனும், பெருமையுடனும் பணி ஓய்வு பெறுகிறேன்.
தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால் நினைத்த இடத்தை அடையலாம். இதை இளம் வழக்கறிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். நீதிபதி ஜி.சந்திரசேகரன் ஓய்வு பெற்றதை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65ஆக குறைந்து காலியிடங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கிறது.