அக்னி வெயில் தொடங்கும் முன்பே கோடை சுட்டெரிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பகலில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு அனல் வீசுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது. ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு கோடை வெயில் கொளுத்துகிறது. மக்களவை தேர்தல் பிரசாரம் வேறு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை 25 நாட்கள் வாட்டி வதைக்க காத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி இன்னும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. நாடு முழுவதும் அதிகபட்ச வெயில் பதிவான முதல் மூன்று இடங்களில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஊட்டியில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் அளவு 5 டிகிரி உயர்ந்து அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. இப்படி எல்லாமே வெயில் மயமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் வெயில் உக்கிரம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. அதனால் தான் நாடு முழுவதும் இந்த அளவுக்கு கொதிக்கிறது.
நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பகலில் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
நாடு முழுவதும் வெயில் பாதிப்பு இருந்தாலும், இப்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு வானிலை இந்தியாவிலேயே இருவேறு விதமாக பதிவாகி உள்ளது. ஒரு பக்கம் வெயில், இன்னொரு பக்கம் கடும் பனி என்ற சூழல் உள்ளது. கால நிலை, பருவநிலை மாற்றங்கள் தான் இதற்கு காரணமா என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. இது ஒருபக்கம் இருக்க இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது.
நீர்நிலைகள், ஆறுகள், மலைகள், அருவிகள், கடற்பரப்புகளை பாதுகாக்க தவறியதால் தான் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. குளிர் பிரதேசங்களில் அனலும், துபாய், சவுதி உள்ளிட்ட கடும் வெயில் நிலவும் இடங்களில் பேய் மழையும் கொட்டித்தீர்ப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கொரோனாகாலம் போல ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தாறுமாறான அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அங்கு அதிகரிப்பதும், சுற்றுலா பயணிகள் அளவுக்கு அதிகமாக குவிந்து இருப்பதை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எதற்குமே ஒரு கட்டுப்பாடு தேவைதான். அப்போதுதான் இயற்கையையும் பாதுகாக்க முடியும்.