திருத்தணி: திருத்தணி அருகே நேற்று மாலை சவ ஊர்வலத்தின்போது ஒருவர் கையில் வைத்தபடி பட்டாசுகளை வெடித்தபடி சென்றுள்ளார். அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அவரது வலதுகையில் இருந்த 2 விரல்கள் துண்டானது. அவர் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம், தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (32). இவர், தனியார் கட்டுமான பணிகளில் மேஸ்திரியாக வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை தும்பிக்குளம் கிராமத்தில் இறந்தவரின் சவ ஊர்வலத்தின்போது, குமார் கைகளில் வைத்தபடி பட்டாசுகளை வெடித்தபடி சென்றிருக்கிறார். அப்போது குமாரின் கையில் இருந்த பட்டாசு எதிர்பாரதவிதமாக வெடித்தது. இதில் குமாரின் வலதுகையில் 2 விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டியது.
படுகாயம் அடைந்த கட்டிட மேஸ்திரி குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கட்டிட மேஸ்திரி குமாரின் வலது கையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.