கோவை: யூடியூபர் சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து சர்ச்சைக்குரியவிதமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ அளித்த புகாரின்பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் கோவைக்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீசார் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். பின்னர் சங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் போலீசார் அடைத்தனர். சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் மீதும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சங்கரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வழங்கக்கோரி கோவை ஜே.எம்.எண் 5 கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விரைவில் விசாரரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.