சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. தேர்வில் வெற்றி பெற்ற 831 பொறியியல் பட்டதாரிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இச்சிக்கலில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களில் 190 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பின்னர் நடத்தப்பட்ட நில அளவையர் & வரைவாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பொறியியல் பணி எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அப்பணியில் சேரவில்லை. பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு கடைசியாக 2019ம் ஆண்டில் தான் நடைபெற்றது. அதன்பின் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆள்தேர்வு நடத்தப்படவில்லை. 2022ல் அறிவிக்கப்பட்ட பொறியியல் பணிகள் இப்போது தான் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆள்தேர்வு நடைபெறவில்லை என்பதால் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.