சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழ்நாடு முதல்வர் கோரிய ரூ.21,692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது.
இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தியும் வரும் ஜன.8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.