சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் கூடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் மகளிர் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் கூட்டியது மற்றும் அவர்களுக்கு தையல் எம்ராய்டரிங் பயிற்சி டோக்கன் வழங்கியது தெரியவந்தது.
இந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோயம்பேடு கே 11 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொழிற்சங்க காளிராஜ் ஆகிய இரண்டு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் அனுமதி வழங்காமல் கூட்டம் கூட்டுவது, பந்தல் போடுவது, தேர்தல் விதிமுறைகளை மீறுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.