திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் அப்பகுதியில் உள்ள பல்வேறு சங்கங்கள் சார்பில் ஆண்டுேதாறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு பல வணிக மற்றும் வியாபார சங்கங்கள், வங்கி அதிகாரிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி 21 அடி உயர தசாவதார விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டது. அந்த சிலையை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ரூ.2 கோடி 20 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு தசாவதார விநாயகர் சிலையை அலங்கரித்தனர். பின்னர் பூஜைக்கு வைக்கப்பட்ட இந்த விநாயகரை வழிபாடு செய்யவும், அதேபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தனித்தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை தரிசித்து, புகைப்படம் எடுத்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.